சனி, ஜூலை 06, 2024

தெருவிளக்கு

சாதிமத பேதமில்லா
பெருவிளக்கு சூரியன்!
சாதிமத பேதமில்லா
சிறுசூரியன் தெருவிளக்கு!

நாம் விழித்தால் உறங்கும்,
நாம் உறங்க விழிக்கும்,
ஊர்க்காவலன் தெருவிளக்கு!

எம்வீட்டு எரிவாயு
அடுப்பெரிய காரணம்
எந்தையின் கல்விக்கு
அருள்செய்த தெருவிளக்கு!

அந்த ஒரு தெருவிளக்கு
பொசுக்கியது ஒரு மனிதனின்
அறியாமை அல்ல! - ஒரு
சந்ததியின் அறியாமை இருளை!

தெருவுக்குத்தெரு உயர்ந்து நிற்கும்
தெருவிளக்கு, தரம் உயர்த்திய
சந்ததிகளின் எண்ணிக்கை என்ன?
எண்ணிமுடிக்க எவரால் முடியும்?

எதிரி கூட்டம் நடுவே கம்பீரமாய்
நடைபோடும் நாயகன் போல,
இரவெல்லாம் இருள்!
இடைஇடையே தெருவிளக்கு!


செவ்வாய், மே 28, 2024

வானவில்

மழைத் திருவிழாவின்
தோரணமே வானவில்லே!
தூரிகையின்றி இயற்கை
வரைந்த ஓவியமே!
நீ எங்கு தொடங்கி
எங்கு முடிகிறாய்?

கதிரவன் உன்
நண்பனா? எதிரியா?
அவன் கதிர்களால்
நீ எழுகிறாய்!
ஆனால் அவன்
எதிரே நிற்கிறாய்!

குளிரும் மழையும்
சுடும் கதிரும்
சேரும் பொழுது
வரும் வானவில் - நீ
சொல்லும் நியதி,
இன்பதுன்பம் இணைவதே 
அழகிய வாழ்வு!

மழை பொழிய 
காத்திருக்கும் நாங்கள்
மழை ஓயவும்
காத்து இருக்கிறோம்
உனக்காக! 

புதன், நவம்பர் 22, 2023

மழைச் சாரலே

நீ இப்படியே இருந்துவிடக் கூடாதா?

அறைக்குள் செயற்கை குளுமையில்
எதிர்ப்பு ஆற்றல் குறையாமல்
எல்லோரும் இன்புற்றிருக்க நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

நித்தமும் சாப்பாட்டு பொட்டலமாய்
உடலை கரிக்கும் உள்ளத்தை அரிக்கும்
வெயிலில் வெந்து ஊருக்கே
உணவு கொண்டு சேர்க்கும்
சகோதரனின் உள்ளம் குளிர நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

தூரமாய் மலைப்பகுக்கு ஓடுகிறோம்
தேகம் குளிர உன்னை தேடுகிறோம் நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

எல்லா உயிர்க்கும் உயிராய் தூவும்
மழைச் சாரலே நீ எப்போதும் எம்மோடு
இப்படியே இருந்து விடக்கூடாதா?

ஒரு ஆன்மாவின் பயணம்

ஒரு ஆன்மாவின் பயணம், 

பிறவி முன் இறையோடு 
உறவாடிய ஒரு பயணம், 

மனித உருபெற கருவறை 
இருளுக்குள் சிறு பயணம், 

சிசு முதல் பிணம் வரை 
தினம் உருமாறி வினை 
சேர்க்கும் கடும் பயணம், 

மாண்டபின் மண்ணுக்குள் 
வினைக்கீடாய் நெடும் பயணம், 

மண்பிளந்து கண்விழித்து 
சேர்த்த வினைக் கெல்லாம் 
விடைகூறும் திகில் பயணம், 

படைப்பு முதல் வீடு வரை 
படிப்படியாய் நிலை மாறும் 
ஆன்மாவின் தொலை தூரப்பயணம், 

வினைக் கீடாய் பெறுவர் 
அவரவர் தம் இருப்பிடம் 
அதுவோர் நிலைமாறாப் பயணம்! 

 

1. படைக்கப்பட்டது முதல் கருவுறும் வரை (50k - 100k yrs)

2. கருவறை வாழ்க்கை (8 - 10 months)

3. இம்மை வாழ்க்கை (1k - 100 - 60 yrs)

4. மண்ணறை வாழ்க்கை (1k - 50k yrs)

5. விசாரணை காலம் (50k yrs)

6. மறுமை வாழ்கை (∞ yrs)

மேற்கண்ட தகவல்கள் இஸ்லாமிய நம்பிக்கை அடிப்படையில் கூறப்பட்டுள்ளது, மேலும் அனைத்து வேதமும் சமயமும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்தது என்றும் அனைத்து வேதமும் இதைத்தான் சொல்கிறது என்றும் இஸ்லாமிய நம்பிக்கை கூறுகிறது.

ஞாயிறு, நவம்பர் 23, 2014

அவசர கவிதைகள் ...!




வந்து மறைந்த
திருமறைகள்
சில நூறு 

அனைத்தும் 
போற்றுவதில்
தாயும் ஒரு கூறு.









இருள் சேர் நேரங்கள் 
தன் நிழலையும் கொல்லும் 
முற்றிலும் இருண்டாலும் 
வாழ்வில் பொருள் சேர்க்க 
உடன் நட்பு நில்லும்.. 









தீண்டாமை இல்லாமை இயலாமை 
அறுக்கும் ஒரு கருவி கல்வி

அறியாமை புரியாமை வெல்லாமை 
விலக்கும் ஒரு விளக்கு கல்வி 

வரலாறு புரளாமல், புரண்டாலும் 
வடிக்கட்டும் வடிகட்டி கல்வி 

பாதாளம் வீழ்ந்தவனை மலை 
ஏற்றும் படிக்கட்டு கல்வி 

பலதேசம் பரதேசம் போனாலும் 
பார்போற்ற வைப்பதுவும் கல்வி 

பொருளீட்ட புகழீட்ட உயிர்காக்க 
தேசவலுகூட்ட செய்வதுவும் கல்வி 

கசடர கற்பதே கல்வி - வாழ்வில் 
கசடர செய்வதே கல்வி... 

(குறிப்பு - தோழர் தமிழ் செல்வனுக்காக அவசரமாக எழுதியவைகள் )

புதன், அக்டோபர் 29, 2014

என்னை அன்பு செய்பவளுக்கு..



அகராதி தோற்றுப்போனது
விளங்கும்படி விளக்க 
அழகு இதுவென்று - உன் 
ஒற்றை புன்னகையை 
காணாத கண்களுக்கு...
உன் தாயும் வள்ளுவனே
உன் ஐந்தடிக்குள் - என்
அறம் பொருள் இன்பத்தை
பொதிந்ததினால்

தமிழ்ச் சுவை 
குன்றி போகுதே 
அவளின் கல்லச் 
சிரிப்பின் முன்
செல்லக் குறும்புகளை 
மெல்ல ரசிக்கும் 
உள்ள மின்னுமிருப்பதை
உன்னால் உணர்கிறேன்
தமிழாழி ஆழம் 
மூழ்கிப் பார்கிறேன் 
உனையெழுத வார்த்தை
முத்தின்றித் தோற்கிறேன்
என்னில் புகுந்து
உன்னில் சிறைவைக்கிறாய்
நம்மில் நாமே
நம்மை தொலைக்கிறோம்
உன்னை எண்ணுகையில்
உள்ளம் துடிக்குதே
உன்னை மறந்தால்
உள்ளம் துடிதுடிக்குதே


துணுக்குகள்..



இறத்தல் 
இழப்பில்லை 
இரத்தல் 
இழுக்கு..
அன்பு
உலகாழும் 
அதுவன்றி 
உலகுவீழும்..!

புன்னகையும் 
மௌனமும் 
கேடயம்...
நம் பிழை
பிறர் பொறுக்கத் 
தேடும் மனம், 
பிறர் பிழைபொறுக்க 
மறப்பது விந்தை..

"பொறுமை" இழந்தால்
விளைவுகள் சொல்லுகிறது
அதன் விலைமதிப்பை...

காசு


காசு - நீ 
அற்புத ஆசான், 
அனைவரின் அசல் 
வர்ணம் காட்டும் 
கண்ணாடி

பொய் உரைத்தல்
திறமை என்பாய்,
உண்மை உதிர்ந்தால்
உளறல் என்பாய்..

கேடென்றே விளங்கியும் 
விழ செய்வாய், 
சுற்றமும் நட்பும் 
விலக செய்வாய்,

காசு - நீ 
அழகிய சதிகாரி,
இருந்தும் உறுதி 
கொண்ட உள்ளமுன் 
தோற்று போவாய்.

புதன், ஆகஸ்ட் 06, 2014

காஸா...!


அழக்கூட நேரமின்றி 
சிதறிய உடலை 
கழுவி முடித்து 
அடுத்தநொடி அணுகுண்டை 
அன்ணாந்து பார்க்கும் 
அவனுக்காக அழ 
இஸ்லாமியானாய் அல்ல 
நாம் மனிதனாய் 
இருத்தல் போதாதா..? 

இந்தியனாய் தமிழனாய்
இருப்பது பற்று!
இஸ்லாமியானாய் 
இருப்பது வெறி! - இது 
உலக அகராதிகள் 
வரையறுத்த வரையறை! 
இதுயென்ன நீதி.?

சனி, ஆகஸ்ட் 10, 2013

தமிழே



இயலும் இசையும் 
கொண்ட தமிழே 
இனியும் தொடரும் 
உன் நாடகமே 

வருவாய் தருவாய் 
அமுதம் காதினிலே 
படுவாய் படர்வாய் 
மொழியும் நாவினிலே 

இயல்பாய்பேச இனிப்பாய் 
என்றும் செந்தமிழே 
கனியாய் கனிவாய் 
கற்பவர் வாயினிலே 

எழுவாய் பயனிலை 
கொண்ட இலக்கணமே 
எழுவாய் தொடுவாய் 
என்நாவில் இக்கணமே.. 


வெள்ளி, மார்ச் 01, 2013

மங்கையர் தினம்..!


மார்ச் 8 மங்கையர் தினம்..!
ஒற்றைக் கவிதையில் எத்தனை எழுத?
உள்ளங் கொண்ட கவலை.!
எழுதத் தொடங்கிய பேனாவுக்கு 
உள்ளூர தொற்றிக் கொண்ட பயம்
மை தீர்ந்துவிடுமே என்று.!

பெண்மையின் மென்மை 
பேசிய பேனாக்களெல்லாம் 
பெண்ணின் பெருமை 
அவள் கொண்டதிறமை 
இவையென பட்டியலிட்டு 
பறைசாற்றும் காலமிது.! 

அன்னை ஆயிஷா, தெரசா, 
இந்திராகாந்தி  யெல்லாம் பானைச் 
சோற்றின் ஒருபதம் - பானையளவு 
எவர் கணிப்பதும் உண்மையில் 
அளவில் அற்பமே ! 

துறைக்கொரு பெண்ணிருந்த 
காலம்போய் தூவிய மழையென 
துறைதோறும் அசத்தும் 
மங்கையர் ஆயிரமாயிரம் - இங்கே 
அரிசியல்போய் அரசியலும் 
செய்யும் பெண்ணினம்.! 

காதலுக்கு கணிக்கையில்லை நீ 
அடிப்படையை புரட்டிபோட 
புயலாய் வந்த புரட்சி, 
ஆணின் வெற்றிக்கு தேவை நீ 
ஓயாதுழைப்பதுன் பிறவிகுணம் 
உந்துதலின்றி பெறுவாய் வெற்றி 

புதன், ஜனவரி 16, 2013

இறைவா..!


உங்கருணையில துளியளவு 
தூவிவிட்டா புவிசெழிச்சு 
பூந்தோட்ட மாகுமப்பா 

மலையளவு எம்மடியிலநீ 
போட்டுபுட்ட மனமெல்லாம் 
உங்கீர்த்தி பாடுதப்பா 

நல்லதுநாலு செஞ்சு 
தரணியில வொருகூட்டம் 
உன்வழியில வாழுதப்பா 

எம்போல் பாவியொருத்தன் 
படியேற உம்வேதம் 
ஒர்வழிய காட்டுதப்பா 

என்னிதயத்துல குடியிருக்கு 
மன்பர்பலர் பார்வையில 
இவ்வுலகமழகாய் தெரியுதப்பா 

எனக்கிட்ட பிச்சபோல 
வொருபுடிய உங்கருணையால 
அவர்மடியில போடுமப்பா 

இத்தனநாள் நாஞ்செய்யு 
தீமையெல்லாம் என்னத்தீண்டாம 
தீக்கிறை யாக்குமப்பா 

வருநாளெல்லாம் உம்புகழ் 
பாடியுனக்கோர் நல்லடிமை 
இவனென் றாக்குமப்பா...

செவ்வாய், ஜனவரி 15, 2013

என்னை யாரென்று...



எதிமறை வார்த்தைக்கெல்லாம்
வரையறா விடுமுறைதந்து
உள்ளஞ்சிலிர்க்கும் உணர்வூட்டும்
தமிழ்த்தேடும் அனுபவம்

வெற்றிதரா தருணங்கள்
சோகம்விதைக்கா ஆச்சரியம்
இலக்கிடம் இடைவெளியின்றி
நகரும் நோகாபாதம்

உழைப்பின் ருசியறிந்த
உச்சக்கட்ட நிமிடங்கள்
வேர்வையின்றி விளைந்த
வெற்றியும் கசந்தமாயம்

என்னை யாரென்று உணர்ந்தபின்
எத்தனை எத்தனை மாற்றம்
"நாளை" விழிகளில் பதிகிறது 
இமயம் தொட்ட நிமிடங்களாய்...

புதன், அக்டோபர் 26, 2011

ஆயுதம் வேண்டும் ..!



துணை யில்லா 
நேரம் வரு 
காமஞ் சில 

உண வில்லா
சீரும் பெரு
விலங்கு போல 

சீரு விலங்கை 
கொல்லுஞ் சிறு 
அம்பு போல 

வருங் காமங் 
கொல்ல வொரு 
ஆயுதம் வேண்டும் 

என் போல் 
இறை நேச 
நெஞ்ச மெல்லாம் 

ஈர மின்றி
உருமு போலதை
வீழ்த்த வேண்டும்


திங்கள், அக்டோபர் 17, 2011

அன்பு மனமே


ஆசையோடு பேசுகின்றாய் 
ஆறுதலை தேடுகின்றாய் 
ஆறுமனமே ஆறுஎன்று 
உனக்குநீயே பாடுகின்றாய் 

பாதிவரை வாழ்ந்துவிட்டாய்
வாழ்ந்தவரை லாபமில்லை 
மீதிவாழத்  துனிந்துவிடாய்
வாழத்துணை தேவையில்லை 

வந்தவரும் போனவரும்  
யாருமென் நினைவிலில்லை  
வருபவரும் இருப்பவரும் 
போய்விடுவார் பொய்யுமில்லை 

சொந்தமொன்றைத் தேடித்தேடி 
உன்னையேன் வாட்டுகின்றாய்
இருப்பதெல்லாம் போதாதென்று  
இன்னுமொன்றைத் தேடுகின்றாய் 

ஆசையோடு பேசுகின்றாய் 
ஆறுதலை தேடுகின்றாய் 
ஆறுமனமே ஆறுஎன்று 
உனக்குநீயே பாடுகின்றாய் 



வியாழன், அக்டோபர் 06, 2011

உன்னோடு பகிர்கிறேன்..!


அன்புள்ள BLOGGER..!

உன்னிடம் பகிர்வதில்
சுகமில்லை, உள்ளோடு
உண்டான சுமைகளையே
உன்னோடு பகிர்கிறேன்

உள்ளம்பீறி பொங்கிப்
பெருகும் உணர்வுக்கீறல்களை
குருதிச் சாயலாய்
உன்னோடு பகிர்கிறேன்

காரிருளைக் கொண்ட
ஒளிச்சேர்க்க மறந்த
நள்ளிரவோடு மட்டுமின்றி
உன்னோடும் பகிர்கிறேன்

காரணந்தெரயுமா உனக்கு?
எந் நகைச்சுவைக்கு
நகைக்க எதிர்வரும்மெவரும்
இமைபொழுதில் ஆயத்தப்படுவர்

உள்ளோடும் சினந்தன்னையும்
உருவான சிந்தனையையும்
உணர்வான கண்ணீரையும்
உணர்வோர் யாருமில்லை

ஒருமுறைக்கு இருமுறை
கேட்போர் யாருமில்லை
உணராதோர் காதிலுரைக்க
தன்மானம் விடுவதில்லை

என் னிறைவனோடும்
நள்ளிரவோடு மட்டுமின்றி
என் சுமையிறக்க
உன்னோடும் பகிர்கிறேன்

பதிவதனைத்தும் உலகுக்கின்றி
எனக்குநீ மீண்டுமுரைக்க
என்னிலொருவனாய் இருப்பதால்
உன்னோடு பகிர்கிறேன்

என்னுறவு, நட்பு என எவரும் 
எனை உணர்ந்தாரில்லை என்னை
யுணர்ந்தவனாய் நானுன்னை அறிவதால்
நான் உன்னோடு பகிர்கிறேன்

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

உணர்வுகள் ..!


மாற்றம் தேடும் மரபுகளை
மனிதம் சாகும் யுத்தங்களை


அடைய முடியா ஆசைகளை
ஆசை தோன்றும் தருணங்களை

உள்ள முடைக்கும் ஊடல்களை
உள் ளுணர்வுத் தேடல்களை

அமைதி அழிக்கும் உணர்வுகளை
உணர்வுகள் புரியா உறவுகளை


மாற்ற வேண்டும் எண்ணங்களால்
இருக்கும்? இரும்பு உள்ளங்களால்..!

வெள்ளி, ஜூலை 23, 2010

தாய்மண்ணே!


எத்தனையோ
காலந் தொட்டு

எத்தனையோ
வாழ்க்கைக் கெட்டு

எத்தனையோ
உறவை விட்டு

எத்தனையோ
உயிரைச் சுட்டு

இன்னும் எத்தனையோ
எத்தனையால் கிட்டிய

நம் சுதந்திரத்தை
நம் அத்தனின்

பெயரால் மொத்தமாய்க்
காத்துச் சுத்தனாவோம்...!

புதன், ஏப்ரல் 14, 2010

அன்பே..!


கல்லானும் உனைக் கண்டால்
காதல் கவிப்பல பாடுவான்

கார்ல்மார்க்ஸ் உனை யடைய 
தனி யுடமைப் பேசுவான் 

மகாக்கவி எழுதிய தூரியக்கோல் 
போல் கூரியக்கண்கள் உனது

உன்மலர் முகங்கண்டால் மகா
கவியெழுதும் கைகள் எனது

கண்ணதாசனை உந்தன் தாசனாக்கும் 
கார்மேகக் கூந்தல் உனது 

காணு மியற்க்கை அழகையெல்லாம் 
ரசிப்பதிலே உனக்கு பாவேந்தன்மனது 

அருங் கருத்துப்பல பேசுகின்றாய் 
பட்டுககோட்டையான் போலே 

உன்னை முழுமையாய்க் கவிப்பாட 
வேண்டுமொருவன் கம்பனுக்கு மேலே 


(குறிப்பு - காதல்கவிதை எழுத முதல்முறை முயற்சி செய்துள்ளேன்,)

சனி, ஏப்ரல் 03, 2010

ஆரம்பகால கிறுக்கல்கள்..!



மெய்த்தேடல்

எழுத்தறிவித்தவன்
இறைவன்,
என்னை
அறிவிப்பவன் யார்?
தேடுகின்றேன்...
பொன்னல்ல..
பொருளல்ல..
என்னை நானே..
எனக்குள்ளே..
யாரென்று?
தேடுகின்றேன்..
இன்னும் விடையில்லை..!


(இது அநேகமாக நான் முதன் முதலில் எழுதிய கவிதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.)










வறட்சி

மழைநீர்த்தேடும்
மண்ணுக்கு
கண் நீர்த்
துளியை
பரிசளிக்கும்
விவசாயி





        



 சாலையோர மனிதன்

நடைபாதைலே
எனதுறக்கம்,
நண்பனாய்
பசிமட்டும்
இருக்கும்,
மனிதகுல
பூதான் நானும்,
இருந்தும்
கல்லறைப்பூகளாய்..!